போலி மருந்து சீட்டு தயாரித்து போதை மாத்திரை வாங்க முயன்ற இருவர் கைது

போலி மருந்து சீட்டு தயாரித்து போதை மாத்திரை வாங்க முயன்ற இருவர் கைது

கோவையில் போலியாக மருந்து சீட்டினை தயார் செய்து போதை மாத்திரை வாங்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர் 

கோவை குனியமுத்தூர் பகுதியில் போலியாக மருந்து சீட்டினை தயார் செய்து போதை மாத்திரை வாங்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த விஜயரங்கன் என்பவர், ஒப்பணக்கார வீதி பகுதியில் மருந்துக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முகமது ரசூல் (22) மற்றும் சக்திவேல் (23) ஆகியோர் மருந்துக் கடைக்கு வந்துள்ளனர்.

அப்போது தனியார் மருத்துவமனையின் மருந்து பரிந்துரை சீட்டினை காட்டி, குறிப்பிட்ட இரண்டு மாத்திரைகளை கேட்டுள்ளனர். போதைக்காக அந்த மாத்திரைகள் பயன்படுத்தப்படுவதால், மருந்து கடை உரிமையாளர் விஜயரங்கனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விஜயரங்கன் அந்த மருத்துவமனையை தொடர்பு கொண்டு விசாரித்த போது, ராஜப்பன் என்பவருக்கு மருந்து சீட்டு வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து விஜயரங்கன் அவர்களிடம் பெயர் மற்றும் முகவரிகளை கேட்ட போது, அவர்கள் விவரங்களை கூற மறுத்துள்ளனர். மேலும் போலியாக மருந்து சீட்டினை தயார் செய்து இருப்பதும் மருந்து கடை உரிமையாளர் விஜயரங்கனுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து விஜயரங்கன் கேட்ட போது, இளைஞர்கள் இருவரும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து மருந்துகடை உரிமையாளர் விஜயரங்கன் கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், என்.ஹெச். சாலையை சேர்ந்த முகமது ரசூல் மற்றும் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் ஆகியோரை கைது செய்து இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story