போதியளவு கையிருப்பு இல்லை - தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்
![போதியளவு கையிருப்பு இல்லை - தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம் போதியளவு கையிருப்பு இல்லை - தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்](https://www.nativenews.in/h-upload/2021/06/01/1081007-img20210601114454.webp)
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவு கையிருப்பில் இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் இன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 31 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்றைய தினம் முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட 4 ஆயிரத்து 410 பேருக்கு கோவாக்சின் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டன. இந்த நிலையில் பொதுமக்களுக்கு செலுத்த தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் கோவை மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் இன்று தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
நஞ்சுண்டாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் நேற்று முன்தினம் வந்தடைந்த 350 கோவிட் சீல்டு தடுப்பூசிகளில் மீதமான 170 தடுப்பூசிகள் இன்று பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. 84 நாட்களுக்கு முன்பு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இங்கு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்படுகிறது. இங்கு பொதுமக்கள் வரிசையில் நின்று இரண்டாவது டோஸ் கோவிட் சீல்டு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மேலும் 18 முதல் 44 வயதினருக்கான தமிழக அரசின் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் மாநகராட்சியில் வீடு வீடாக சென்று சளி காய்ச்சல் உள்ளதா எனகணக்கு எடுக்கும் முன் களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு இன்று சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. இதற்காக 6 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் மண்டலத்துக்கு தலா ஒரு முகாம் என்ற அடிப்படையில் 5 முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்துக்கு கடந்த 10 நாட்களில் தமிழக அரசு 62 ஆயிரத்து 900 கோவிட் சீல்டு தடுப்பூசிகளும் 20,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் என மொத்தம் 83 ஆயிரத்து 700 தடுப்பூசிகள் வழங்கியுள்ளது. இதில் 76 ஆயிரத்து 459 தடுப்பூசிகள் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது வரை மொத்தமாக 5 லட்சத்து 22 ஆயிரத்து 577 தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu