மத்திய அரசுப் பணிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம்: கோவையில் வடமாநில இளைஞர்கள் 4 பேர் கைது

கோவையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர்கள்.
மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ளது. இந்த நிறுவனத்தில் பன்முக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்தப் பணிக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் 4 ஆம் தேதி கோவையில் நடைபெற்றது. அப்போது தேர்வு எழுத வந்தவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில் இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்ற போது தேர்வு எழுதிய நான்கு பேரின் புகைப்படம் மற்றும் கை ரேகை ஆகியவை மாறுபட்டு இருந்தது. இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையெடுத்து, அந்த நான்கு பேரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து ஆங்கிலத்தில் எழுதுமாறும் சரளமாக பேசுமாறும் கூறினர்.
ஆனால், நான்குபேரும் பேசவும் எழுதவும் முடியாமல் தவித்தனர். ஆனால் தேர்வில் அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் நான்கு பேரும் ஆள் மாறாட்டம் செய்து தங்களது பெயரில் வேறொருவரை வைத்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநர் குனிக்கண்ணன் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் சாய்பாபா காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அமித் குமார், அமித் குமார், அமித், சுலைமான் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், மத்திய அரசு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இதேபோன்று இவர்கள் வேறு எங்காவது ஆள்மாறாட்டம் செய்துள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu