கோவை அருகே மளிகை கடையில் அதிகாரிகள் போல் நடித்து பணம் கொள்ளை

கோவை அருகே மளிகை கடையில் அதிகாரிகள் போல் நடித்து பணம் கொள்ளை
X
கோவை அருகே மளிகை கடையில் அதிகாரிகள் போல் நடித்து பணம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 52). இவர் இடையர்பாளையம் சர்ச் தெருவில் 35 வருடங்களாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் பரத் (24). இவர் தந்தைக்கு உதவியாக கடையை பார்த்து கொண்டிருந்தார். சம்பவத்தன்று மாலை அவர் வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்து இறங்கிய மர்ம நபர்கள் 3 பேர் தாங்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்று கூறி கடைக்குள் நுழைந்தனர். உங்கள் கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பதாக தகவல் வந்தது என்றும் கடையை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அவர்களை அதிகாரிகள் என நம்பிய பரத்தும் சோதனை செய்ய அனுமதித்துள்ளார். பின்னர் கடையில் இருந்து சில புகையிலை பொருட்களை மர்மநபர்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் கடையில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். உடனே பரத், பணத்தை ஏன் எடுக்குறீங்க என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணத்தை அபராதம் என்றும் போலீஸ் நிலையத்துக்கு வந்து கணக்கு காட்டி விட்டு பெற்று செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து பரத்தை மர்ம நபர்கள் காரில் ஏற்றி போலீஸ் நிலையம் கூட்டி செல்வதாக கூறியுள்ளனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக அவரை காரிலேயே வைத்து நகரை சுற்றியுள்ளனர். அவரிடம் புகையிலை பொருட்கள் விற்கும் ஏஜெண்ட் விவரத்தை கேட்டுள்ளனர். இதையடுத்து கார் சுந்தராபுரம் அருகே செல்லும் போது வண்டியை நிறுத்தி அவரிடம் ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள் அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்று விட்டனர்.

இந்நிலையில் காரில் வந்தது அதிகாரிகள் இல்லை என்றும் தான் அவர்களால் ஏமாற்றப்பட்டிருப்பதும் அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமா பாணியில் அதிகாரிகள் போல நடித்து மளிகை கடைகாரரிடம் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story