வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக கோவை ரயில் நிலைய முற்றுகை போராட்டம்

வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக கோவை ரயில் நிலைய முற்றுகை போராட்டம்

பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவை இரயில் நிலையம் முற்றுகை.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் அழைப்பு விடுத்திருந்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 11 கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், மத்திய அரசு உடனடியாக இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் அழைப்பு விடுத்திருந்தனர். இதன்படி நாடு முழுவதும் பல இடங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மற்றும் கட்சியினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, ஏஐடியூசி, இந்திய மாணவர் சங்கம், விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கோவை ரயில் நிலையம் முன்பாக கூடிய போராட்டக்காரர்கள், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி முழக்கங்களை எழுப்பிய படி ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் ரயில் நிலையத்திற்கு நுழையாத வண்ணம் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். தடுப்புகளையும் மீறி போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கேரட், வெண்டை, பாவக்காய், உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக கோர்த்து கழுத்தில் அணிந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story