ஏர் ஹாரன் பொருத்திய பேருந்துகளுக்கு அபராதம்

ஏர் ஹாரன் பொருத்திய பேருந்துகளுக்கு அபராதம்

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை 

ஏர் ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா? என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா? என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் 90 டெசிபல் க்கும் அதிகமாக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்தப்பட்டிருந்த பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து பேசிய மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார், மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரையின் படியும் மாவட்டத்தில் பல்வேறு பேருந்துகளில் ஏர் ஹார்ன் தொடர்ந்து பயன்பட்டு வருவதாக எழுந்த புகார்களின் அடிப்படையிலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், நான்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்கள் குறித்து ஆய்வு செய்ததாக கூறினார். ஹாரன்களில் டெசிபில் அதிகமாக இருந்த காரணத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் இன்று 20 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆய்வானது தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம்- பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆய்வானது நடைபெறும் எனவும் தெரிவித்தார். இந்த அபராத தொகையானது 3000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாய் வரை விதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். போக்குவரத்து துறையில் வேக தகுதி சான்று என்பது 80 கிலோமீட்டர் வேகம் தான் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் விபத்துக்கள் நேர்ந்தால் அதிக வேகத்தினால் தான் நடைபெற்றது என கூற முடியாது அந்த சூழல் எவ்வாறு என்று தெரியாது என்றார். மேலும் கடந்த மாதம் விபத்துக்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story