கோவை அருகே கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆறுதல்

கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி நிவாரண உதவி வழங்கினார்.
கோவை அருகே கரடிமடையில் கொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.
கோவை கரடிமடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அவரின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
பின்னர் வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாரயம் விற்பனை நடக்கிறது. குறிப்பாக கோவை கரடிமடையில் அ.தி.மு.கவை சேர்ந்த செல்வராஜ் என்பவர், டாஸ்மாக்கில் மது கூடுதலாக விற்பனை செய்வதை கேள்வி கேட்டுள்ளார். இதற்காக அவரை அந்த டாஸ்மாக்கை நடத்தும் தி.மு.க.வை சேர்ந்த ராகுல், கோகுல் அடித்து தாக்கியுள்ளனர். இதில் அவர் பலியாகி விட்டார். இவ்வளவு தைரியமாக இந்த கொலையை நிகழ்த்தியுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு ஆதரவாக போலீஸ் துணையாக உள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அ.தி.மு.கவினர் தனி தீர்மானம் கொண்டு வருவோம். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அ.தி.மு.கவினர் போராடுவோம். கோவையில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடக்கிறது. இதனை தடுக்காத போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu