வீட்டு வசதி வாரியத்தின் இழப்பீடு கோரி விவசாயிகள் கோவையில் பேரணி

கோவையில் விவசாயிகள் பேரணி நடத்தினர்.
கோவையில் விவசாயிகள் தங்களிடம் இருந்து கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கோரி பேரணி நடத்தி மனு கொடுத்தனர்.
விவசாயிகள் சங்கத்தினர் (சாதி, மதம் கட்சி சார்பற்றது) விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் மணி மற்றும் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி ஆகியோர் தலைமையில் கோவை சிவானந்தா காலனியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள கோரிக்கை பெட்டியில் மனு அளித்தனர். அப்போது விவசாயிகள் சங்க (சாதி, மதம், கட்சி சார்பற்றது) பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியதாவது:-
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் கடந்த 1980-ம் ஆண்டு வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீட்டை கட்டி தர வேண்டும் என்ற நல்ல நோக்கில் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக கோவையில் வீரகேரளம், வடவள்ளி, வெள்ளக்கிணறு, கணபதி , தெலுங்குபாளையம், காளப்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் சவுரிபாளையம் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்த முன்மொழிவு செய்யப்பட்டது. வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்த பின்னரும் சிலருக்கு இழப்பீடு வழங்கப்பட்டும், வழங்கப்படாமலும் உள்ளது.இதனால் பல கிராமங்களில் விவசாயிகள், பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நில கையகப்படுத்தும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேரணியில் ஒருங்கிணைப்பாளர் மணி, பொருளாளர் சண்முகம், செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu