மது போதை நபரால் கோவிலுக்குள் செல்ல முடியாமல் தவித்த பக்தர்கள்

மது போதை நபரால் கோவிலுக்குள் செல்ல முடியாமல் தவித்த பக்தர்கள்
X

மது போதையில் கோவில் அருகே விழுந்து கிடந்த நபர்.

அன்னூர் அருகே மது போதை நபரால் கோவிலுக்குள் செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

அன்னூரில் மது குடித்துவிட்டு விழுந்து கிடந்த நபரால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் தவித்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒதிமலை சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளில், எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு வருபர்கள் மது வாங்கி குடித்து விட்டு, சாலைகளில் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றனர். இந்த 2 கடைகளும், அன்னூரில் உள்ள மன்னீஸ்வரர் கோவில் அருகே உள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மதுபோதையில் ஆங்காங்கே சிலர் கிடப்பது, பக்தர்களை முகம் சுளிக்கவும் வைக்கிறது. இதனால் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் பல நாட்களாக விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று டாஸ்மாக் கடைக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மதுவை வாங்கி குடித்தார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில், தள்ளாடியபடியே சென்ற அவர், மன்னீஸ்வரர் கோவில் அருகே கீழே விழுந்துவிட்டார். தொடர்ந்து கோவில் முன்பு உள்ள சாலையில் அங்குமிங்குமாக உருண்டு கொண்டு இருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சியாகினர். அவரின் அருகே சென்று அந்த நபரை பக்தர்கள் எழுப்ப முயற்சித்தனர்.

ஆனால் அவர் எழுந்திருக்கவே இல்லை. கோவில் முன்பு அங்குமிங்கும், சாலையில் உருண்டபடியே இருந்தார். இதையடுத்து பொதுமக்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். ஆனாலும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story