அண்ணாமலையின் படத்தை கிழித்தெறிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அண்ணாமலையின் படத்தை கிழித்தெறிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் அண்ணாமலையின் உருவ படத்தை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து, கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் அண்ணாமலை தன்னைப்பற்றி தவறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் தான் கூறிய கருத்தில் இருந்து நான் பின்வாங்க போவதில்லை, செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை, செல்வப் பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும், அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் செல்வப்பெருந்தகை மீதான வழக்குகளையும் பட்டியலிட்டு இருந்தார்.

அண்ணாமலையின் பதிவுக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து, கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாவட்ட தலைவர் விஎம்சி மனோகரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை கிழித்தெறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். அண்ணாமலை தனது கருத்தை திரும்ப பெற வேண்டுமென அவர்கள் அப்போது வலியுறுத்தினர்.

Tags

Next Story