டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியில் கோவை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்

கோவையில் டெங்கு கொசு புழு ஒழிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக உள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. வங்க கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவதால் வெப்பக்காற்றிற்கு பதிலாக தென்றல் காற்று வீசி வருகிறது.
அந்த வகையில் கோவை மாநகரிலும் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மழைநீர் தேங்கும் பட்சத்தில் அதில் டெங்கு கொசு புழுக்கள் வளர வாய்ப்புள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 6500 தெருக்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது நல்ல தண்ணீர் தொட்டிகள், வீட்டில் தேவையற்ற பொருட்களை மழை நீர் படும்படியாக வைத்தல் போன்றவற்றை ஆய்வு செய்து அதில் அபேட் மருந்து ஊற்றியும், டயர், தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்தும் பணியிலும், மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் வருகின்றனர்.
மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் மழைநீர் தேங்கும் வண்ணம் இருந்தாலும் அல்லது குடிநீர் தொட்டி திறந்து இருந்தாலும் அதிலிருந்து கொசு புழுக்கள் வளர்வதற்கு காரணமாக இருந்தால் அதனை கண்டறிந்து அதனை அழித்தும், கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu