மேட்டுப்பாளையம் அருகே 3 மணி நேரம் பலாப்பழம் ருசித்த காட்டு யானை பாகுபலி

மேட்டுப்பாளையம் அருகே 3 மணி நேரம் பலாப்பழம் ருசித்த காட்டு யானை பாகுபலி
X

பாகுபலி காட்டுயானையுடன் வனத்துறை அதிகாரிகள்.

மேட்டுப்பாளையம் அருகே 3 மணி நேரம் பலாப்பழம் ருசித்த காட்டு யானை பாகுபலி பற்றிய தகவல் கிடைத்து உள்ளது.

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குபட்பட்ட சமயபுரம், நெல்லிமலை வனப்பகுதிகளில் நடமாடிய பாகுபலி யானை தற்போது வாயில் காயத்துடன் சுற்றித்திரிகிறது. இதையடுத்து வனத்திலுள்ள பாகுபலி காட்டுயானையை கண்காணிக்க கடந்த வாரம் சாடிவயல் வனப்பகுதியில் இருந்த 2 மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த சனிக்கிழமை முதுமனை யானைகள் முகாமில் இருந்து யானைக்கு சிசிக்சை அளிக்க வசீம், விஜய் ஆகிய இரு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன.

இந்த யானைகளின் உதவியுடன் பாகுபலி காட்டுயானைக்கு மயக்க ஊசி செலுத்தி வாயில் உள்ள காயத்தின் தன்மையை அறிந்து அதற்கு சிகிச்சை அளிக்க 2 மருத்துவ குழுவினர் வந்தனர். ஆனால் கடந்த 4 நாட்களாக பாகுபலி யானையை மருத்துவ குழுவினர், வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். பாகுபலி யானை இடம் மாறி ஒவ்வொரு இடமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் குன்னூர் ஆறு வரும் வழியில் ஒரே இடத்தில் நின்று 3 மணி நேரம் பலா பழத்தை ருசித்துள்ளது. அந்த இடம் யானையை மீட்க முடியாத அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. அதனால் வனத்துறையினரால் நேற்று யானையை மீட்க முடியவில்லை. இன்றும் தொடர்ந்து பாகுபலி யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனஆர்வலர்கள் கூறியதாவது:-

பாகுபலி காட்டுயானைக்கு வலியின் தாக்கம் அதிகம் உள்ளதால் தான் கடந்த வாரம் தாசனூர் பகுதியிலுள்ள கோவில் சுவரை உடைத்து சென்றுள்ளது. இதுவரை பயிர்களை சேதப்படுத்தி வந்தது தற்போது உடைமைகளை சேதப்படுத்தி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே யானைக்கு சிகிச்சை அளிப்பதில் மெத்தனம் காட்டாமல் விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story