அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம்: திருமாவளவனுக்கு அதியமான் கேள்வி

அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம்: திருமாவளவனுக்கு அதியமான் கேள்வி
X

செய்தியாளர்கள் சந்திப்பில் அதியமான். 

அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக திருமாவளவனுக்கு அதியமான் கேள்வி எழுபபி உள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் ஆதிதமிழர் பேரவையின் தலைவர் அதியமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பில் மாநில அரசிற்கு உள் ஒதுக்கீடு வழங்குகின்ற அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு செல்லும் என்பதையும் நீதிமன்றம் கூறியுள்ளது என்பதை குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் சென்னையா? ஆந்திர பிரதேசமா? என்ற ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அந்த தீர்ப்பில் பட்டியல் இன மக்கள் அத்தனை பேரும் ஒரே வகையை சேர்ந்தவர்கள் அவர்கள் ஹோமோஜினியஸ் என்று இருப்பதாக குறிப்பிட்டார்கள். ஆனால் தற்பொழுது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் கடந்த காலம் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என்று கூறுகிறது. அது மட்டுமல்லாமல் மாநில அரசிற்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு அதிகாரம் உள்ளது என்ற தீர்ப்பையும் வழங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இத்தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தை தாக்கல் செய்துள்ளார், அந்த சீராய்வு மனுவில் உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார்‌. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்தால் தமிழ்நாட்டில் உள்ள மூன்று சதவிகித முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று கூறுவதாக தான் அர்த்தம் எனத் தெரிவித்தார்.உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவு என்று திருமாவளவன் கூறியிருக்க வேண்டும் ஆனால் அவர் அப்படி கூறாமல் இருப்பதாகவும் கடந்த 15 ஆண்டுகளாக உள் ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன் என்று வாய்மொழியாக மட்டுமே கூறி வருகிறார். அவர்களின் எந்த நடவடிக்கையும் உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இல்லை என விமர்சித்தார்.

20 ஆண்டுகால விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நடவடிக்கைகளில் என்றைக்காவது அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆதரித்து போராட்டமோ கருத்தரங்கமோ பேரணியோ நடத்தி உள்ளீர்களா? எனவும் கேள்வி எழுப்பினார். உள் ஒதுக்கீடு என்பது வாழ்க்கை போராட்டம் என தெரிவித்த அவர் 30 ஆண்டு காலமாக போராடி இந்த ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதாகவும் அதனை கலைஞர் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு என்கின்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார்.உள் ஒதுக்கீட்டை இதிலிருந்து ஏன் தருகிறீர்கள் என்று கிருஷ்ணசாமி கேள்வி எழுப்புகிறார். ஆனால் இதிலிருந்து எடுத்து தராமல் வேறு எதிலிருந்து எடுத்து தருவது என அதையே கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் வரக்கூடிய அதிகாரத்தை வேண்டாம் என்று விசிக கூறிக் கொண்டிருப்பதாகவும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் அனைத்து அதிகாரங்களையும் பறித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் வகைப்படுத்துங்கள் உண்மையில் யார் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு கொடுங்கள் என தெரிவித்தார். அருந்ததிய மக்கள் கீழ் ஏதேனும் சாதியினர் இருந்தால் அவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை பிரித்து கொடுங்கள் என கூறினார். தமிழக முதல்வர் உடனடியாக இதற்கென ஒரு குழு அமைத்து வகைப்படுத்துதலுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு முன்பாக சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர் அப்போதுதான் இதனை நிறைவேற்ற முடியும் என கூறினார்.

தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை நிறுவியிருப்பதாகவும் எங்களுடைய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய பேரணியை உள் ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவும் வகைப்படுத்துதலை ஆதரித்தும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story