செந்தில் பாலாஜி கைது: கோவையில் நாளை தி.மு.க. கண்டன பொதுக்கூட்டம்

அமைச்சர் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் நாளை தி.மு.க. சார்பில் தி.மு.க. கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
வடகோவையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்ற செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தி.மு.க செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். கூட்டத்தில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் நாளை மறுநாள் மாலை தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது, இதில் 50 ஆயிரம் பேர் பங்கேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற அரசு துறைகளை ஏவி கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்க கூடிய செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தி உள்ளது. சோதனை மட்டுமல்லாமல் அவரிடம் விசாரணை நடத்துவதாக கூறி துன்புறுத்தல்களை கொடுத்துள்ளனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மத்திய பா.ஜ.க அரசின் இந்த செயலை கண்டித்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவை சிவானந்தா காலனியில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செ யலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தி.மு.க தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் உள்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.இந்த கூட்டத்தில் தி.மு.க. வை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், வக்கீல் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu