கோயம்புத்தூர் மக்கள் தாமரை மலர செய்வார்கள் : அண்ணாமலை நம்பிக்கை

கோயம்புத்தூர் மக்கள் தாமரை மலர செய்வார்கள் : அண்ணாமலை நம்பிக்கை

தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை

கோவை தெற்கு தொகுதியில் எப்படி தாமரை மலர்ந்ததோ, அதேபோல கோவை மக்களவை தொகுதியில் உள்ள எல்லா மக்களும் தாமரை மலர செய்வார்கள்

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டி வீதியில் பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி மக்களை பொருத்தவரை நேர்மையின் பக்கம் நிற்போம் என்பார்கள். வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி எப்படி நம்முடைய கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் தாமரை மலர்ந்ததோ, அதேபோல நம்முடைய கோயம்புத்தூர் மக்களவை தொகுதி எல்லா மக்களும் தாமரை மலர செய்வார்கள் என நம்புகிறேன்.

பாஜகவிற்கு பதிவு செய்யக்கூடிய வாக்கு சதவீதத்தை அதிகளவில் இங்கு கொடுப்பீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் இருக்க கூடிய பகுதி மிக முக்கியமான பகுதி, காரணம் இந்தியாவினுடைய மிக முக்கியமான நம்முடைய எல்லா தொழிலும் கூட நடக்கின்ற பகுதி.

நகை தொழிலாளராக இருக்கட்டும், அந்த நகை சம்பந்தப்பட்ட எல்லா நுணுக்கமான வேலைகளாக நடக்கும் இடம். இந்த பகுதியை தென்னிந்தியாவினுடைய மான்செஸ்டர் என்று சொல்லுவோம். அப்படிப்பட்ட அற்புதமான இடத்தில் நின்று கொண்டிருக்கின்றோம்.

பிரதமர் நரேந்திர மோடி அனுதினமும் கூட மக்களை எப்படி மேம்படுத்த வேண்டும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது முறை பிரதமர் 400 பாராளுமன்ற உறுப்பினர்களை தாண்டி வருவார். மக்களவை தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பது நம்முடைய அக்கா வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினராக செய்திருக்கக்கூடிய பணியை உங்கள் முன்னால் வைத்தே நாங்கள் வாக்கு கேட்கின்றோம்.

மற்றவர்களைப் போல் இதை செய்வோம் அதை செய்வோம் என்று சொல்வதை விட, இது செய்து இருக்கின்றோம், இன்னும் அதிகமாக செய்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று தான் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியினுடைய மக்களிடையே வேண்டுகோள் விடுகின்றோம்.

நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மட்டுமே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நம்முடைய குறிஞ்சி கார்டன் பகுதியில தார் சாலை அமைத்து கொடுத்து இருக்கார். இந்த பகுதியில் மட்டுமே 11 குழந்தைகளை மோடியின் குழந்தைகளாக நம்முடைய எம்எல்ஏ தேர்ந்தெடுத்து உதவி செய்து வருகிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு முயற்சி எடுத்து வருகிறார். அதையும் மக்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் செய்திருக்கக்கூடிய சாதனைகள் சில துளிகள் தான்.

சட்டமன்ற உறுப்பினர் இருக்கும் பொழுது சிறிய பணிகள் இங்கே நடக்கிறது. நாங்கள் உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறோம். மிக முக்கியமாக நகை உற்பத்தியில் யாரெல்லாம் இருக்கிறீர்களோ, கோவையை ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக நகை உற்பத்தியை பொறுத்தவரை கொண்டு வருவதற்கான எல்லா முயற்சியும் எடுப்போம்.

எல்லா தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கூட இந்த நேரத்திலே நாங்கள் சொல்லிக் கொள்கின்றோம். நம்முடைய தேர்தல் அறிக்கையிலும் கூட இருக்கும் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக கோவையை அறிவிக்க வேண்டும் என்பது இடம்பெறும் எனத் தெரிவித்தார்.

Tags

Next Story