மேட்டுப்பாளையத்தில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு வலைவீச்சு

கோவை அருகே மேட்டுப்பாளைத்தில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரங்கசாமி (வயது 26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த ஆண்டு ரங்கசாமி, சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.
பின்னர் அவர் பண்ணாரி அருகே உள்ள கோடயாபாளையத்துக்கு சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்தார். கடந்த 10 மாதங்களாக ரங்கசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார். சிறுமி திடீரென மாயமானதால் அவரது பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்தநிலையில் சிறுமியை ரங்கசாமி கடத்தி சென்று திருமணம் செய்து கோடயாபாளையத்தில் வசித்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 10 மாதங்களாக ரங்கசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிறுமியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கடந்த 10 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ரங்கசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu