போலீசாரின் அறிவுரையையும் மீறி கோவையில் வாலிபர் தற்கொலை

கோவையில் போலீசார் அறிவுரை கூறிய பின்னரும் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 41). மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 5-ந் தேதி இவர் மோட்டார் சைக்கிளில் பாப்பம்பட்டி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அவர்கள் சுரேஷ்குமாரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர் மோட்டார் சைக்கிள் டேங் கவரில் பாட்டிலில் பெட்ரோல் வைத்து இருப்பதை போலீசார் பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுரேஷ்குமார் அவருக்கு வாழ பிடிக்க வில்லை. எனவே தற்கொலை செய்ய போவதாக கூறினார். அதற்காக தான் பெட்ரோல் பாட்டிலுடன் சென்று கொண்டு இருக்கிறேன் என்றார்.
இதனையடுத்து போலீசார் சுரேஷ்குமாருக்கு அறிவுரை கூறி அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்தனர். மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் லைசென்சு ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொண்டனர். வீட்டில் ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் காலையில் போலீஸ் நிலையம் வந்து மோட்டார் சைக்கிளை பெற்று செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி சூலூர் பழைய பஸ்நிலையத்தில் விஷம் குடித்து வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இந்த தகவல் கிடைத்தும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வாலிபர் யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் சுரேஷ்குமாரின் அண்ணன் தனது தம்பியை கடந்த 3 நாட்களாக காணவில்லை என சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரிடம் பழைய பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த வாலிபரின் புகைப்படத்தை காட்டினர். அப்போது இறந்தது சுரேஷ்குமார் என்பது தெரிய வந்தது. தற்கொலை எண்ணத்துடன் சுற்றித்திரிந்த அவரை போலீசாரால் அறிவுரை கூறி அனுப்பி 12 மணி நேரத்துக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu