கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ

கோவையில் கார் திடீரென தீ பிடித்து எரிந்தது.
கோவை ராமநாதபுரம் பழைய சுங்கத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் சிட்கோ பகுதியில் சொந்தமாக நிறுவனம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவர் தினமும் தனது காரில் தனது நிறுவனத்திற்கு சென்று வருவது வழக்கம். இவரிடம் டிரைவராக சுந்தராபுரம் கே.வி.கே. நகரை சேர்ந்த பால்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இன்று காலை ஆரோக்கியராஜ் வழக்கம் போல தனது காரில் சிட்கோவில் உள்ள நிறுவனத்திற்கு சென்றார். அங்கு பணிகளை பார்வையிட்ட அவர் மீண்டும் மதியம் 12.15 மணியளவில் நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். காரை டிரைவர் பால்ராஜ் ஓட்டி வந்தார்.கார் சிட்கோ ஆர்ச் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. கார் சென்று கொண்டிருந்த போதே தீ பிடித்ததால் டிரைவர் காரை சாதுர்யமாக இயக்கி சாலையோரம் நிறுத்தி விட்டார். பின்னர் காரில் இருந்த ஆரோக்கியராஜ் மற்றும் பால்ராஜ் ஆகியோர் கதவை திறந்து கொண்டு வெளியில் ஓடி வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப் ப்பட்டது.
கார் தீ பற்றி எரிவதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் தீபிடித்து எரிந்து கொண்டிருந்த கார் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ பிடித்து எரிந்த காரை பார்வையிட்டு காரை மீட்டனர்.
மேலும் இது தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் தீ பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவையில் இன்று காலை சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu