ஐ.டி., துறை அபாயங்கள்? யோசித்து முடிவு செய்யுங்க...!

இந்திய ஐ.டி., துறையினை குறைத்து மதிப்பிடும் வகையில் இந்த பதிவு எழுதப்படவில்லை. சாதக பாதகங்களை அலசுகிறது.

Update: 2024-10-05 05:59 GMT

ஐடி துறை -கோப்பு படம் 

ஐடி துறை குறித்து சமூக வலைதளங்களில் வந்த ஒரு பதிவினை வாசகர்களுக்கு தந்துள்ளோம். சாதக, பாதகங்களை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இப்போது பதிவை பார்க்கலாம்.

சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன ஒரு விஷயம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இது உண்மையா பொய்யா என்பது எனக்குத்  தெரியாது. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நண்பரின் மகள் 12வது வகுப்பில் மிகச்சிறந்த மதிப்பெண் பெற்றாள். அவளுக்கு IT படிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் நண்பர் அவளை அமரவைத்து பேசி, வேறு துறைக்கு தயார்படுத்தி விட்டார். பல வருடங்கள் குடும்ப உறவு என்பதால், எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரிடம் இது குறித்து பேசியது சுருக்கமாக.

IT துறையில் தற்போது லட்சக் கணக்கில் சம்பளம் கிடைப்பதன் பின்னால் ஒரு மிகப்பெரிய ஜியோபொலிடிக்கல் ஸ்ட்ராடஜி உள்ளது. ஒன்று நமது பாரத வளர்ச்சியை தடுப்பது. இன்னொன்று நமது கலாசாரத்தை குடும்ப உறவுகளை சிதைப்பது.

சமீப காலங்களில் பொறியியல் படித்த மாணவர்கள் கூட ஏதோ ஒரு IT வேலையை நோக்கி ஓடுகின்றனர். ஏனெனில் மற்ற துறைகளில் சம்பளம் குறைவு (விதிவிலக்குகள் தவிர்த்து), உற்பத்தி பணி இடங்களில், இயந்திரங்களுக்கு நடுவே கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். இதனை இன்றைய தலைமுறை விரும்பாத அளவிற்கு மனதை மாற்றி விட்டனர்.

இதனால் மற்ற துறைகளில் வளர்ச்சி என்பது 2000ஆம் ஆண்டுக்கு பிறகு குறைந்து, சீனாவில் இருந்து சிறு பொருட்களை கூட இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது. பாரதம் காலங்காலமாக சுயதொழிலில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த நாடு.

ஆனால் இதனை பிரிட்டிஷார் மாற்றி முதலில் அரசு வேலை என்ற மாயை உருவாக்கி, (அதிகபட்சம் ஒரு 5-8% பேர் இருக்கலாம்) அவர்களுக்கு எல்லா சலுகைகள் அதிகம் உடல் உழைப்பு தேவையில்லை, நல்ல வருமானம், அதையும் தாண்டி தங்கள் கடமையை செய்யவும் செய்யாமல் இருக்கவும் வருமானம், பென்ஷன் என எல்லோரையும் அதன் பின்னால் ஓடவிட்டு, தொழில் வளராமல் ஒரு சூழ்நிலையை உருவாக்கினர். 

ஒரு கால கட்டத்தில் இது முடியாத போது பிரிண்ட் செய்யப்பட்ட டாலர்களை கொடுத்து, IT துறையை வளர்த்து விட்டனர். இதன் மூலம் ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் கடந்த 70-80 ஆண்டுகளில் முடங்கி, உடல் உழைப்பும் குறைந்து, தொழில் வளர்ச்சியே மந்தமாகும் நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இன்று எந்த இளைய தலைமுறையினரையும் கேளுங்கள். ஒரு ஏசி அறையில் நாள் முழுவதும் உட்கார்ந்து, வேலை செய்வதை 90% பேர் விரும்புகின்றனர். வேறு வழியில்லாமல் வேறு வேலைகளுக்கு சென்றவர்களும், எந்த திறனையும் வளர்த்துக் கொள்ளாமல் விதியே என வாழுகின்றனர்.

இதில் பெண்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது வேண்டுமென்றே திட்டமிட்டு நடக்கிறது. இதனால் பல பெண்கள் குறைந்தபட்சம் 28- 30 வயது வரை திருமணம் என்பதையே ஏற்பதில்லை. அப்படியே வரன் தேடினாலும் அவர்களுக்கு இணையாக அல்லது அதிக சம்பளம் வாங்கும் மற்றதுறை இளைஞர்கள் கிடைப்பதில்லை.

பெண்கள் தங்கள் குழந்தை பிறப்பு காலத்தை தள்ளி போடுவதால் மக்கள் தொகை, இளைஞர்கள் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இதே நிலை ஏற்கனவே ஐரோப்பா, அமெரிக்கா, சீனாவிலும் பெரும் பிரச்சினையாகி உள்ளது. மொத்தத்தில் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள்.

1.தொழில் வளர்ச்சி இன்றும் பெரும் பிரச்சினை

2. அடிப்படை மனவளர்ச்சி, திறன், ஆராய்ச்சி, குறைந்து கொண்டே வருகிறது.

3. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டே வருகின்றன

4. பெண்களின் உடல் நிலை பாதிப்புகள் குறித்து சொல்லவே வேண்டாம்.

5. பல குழந்தைகள் ஒற்றை குழந்தைகளாக மனஆரோக்கியமின்றி, தனிமைப்பட்டு போகின்றனர்.

6. இந்த கவர்ச்சிகரமான வேலைகளில் 40 வயதுக்கு பிறகு இவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். அப்போது ஏற்படும் மன அழுத்தம் ஏராளம்.

7. நகரங்களில் மட்டுமே மக்கள் தொகை கூடுவதால், பல பிரச்சினைகள்.

8. வயதானவர்கள் தனித்து விடப்படுதல், குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறைக்கு சூழல் அதிகரிக்கிறது.

9. மருத்துவ மாஃபியா இதனை பெரிய அளவில் கொண்டாடி பணம் பார்க்கின்றனர்.

10. பாரம்பரிய உணவுகள் மறந்து, வீடுகளில் உணவு தயாரிப்பது குறைந்து, ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

11. ஸ்விக்கி, ஜொமாட்டோ நல்ல காசு பார்க்கின்றனர். அதே சமயம் கலப்பட உணவுகள், தரமற்ற ஆரோக்கியமற்ற ரெடி உணவுகள் மூலம் பெரும் பணம் பார்க்கின்றனர்.

இப்படி பலவற்றை சொல்லிய அவர், எங்கள் குடும்பத்தில் ஆண்கள் அதிக அளவு சம்பாதிப்பதும், பெண்கள் (திறமையானவர்கள், ஸ்பெஷலிஸ்ட்டுகள், விதி விலக்குகள் தவிர்த்து) மற்றவர்கள் குடும்பத்தை பாதிக்காத அளவு வேலை பார்த்தால் அல்லது வேறு சிறு தொழில்களில் ஈடுபட்டால் போதும் என்று முடிவெடுத்துள்ளோம்.

பெண்கள் ஃப்ரீயாக இருப்பதால் எல்லா குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கின்றனர், மத, இன, கலாசாரம் சம்மந்தமான விழாக்களை முன்னெடுத்து செய்வது, உறவினர் வீடுகளுக்கு எந்த நேரமும் சென்று வருவது, சுற்றுலா அல்லது ஆன்மீக தலங்களுக்குச்  செல்வது என மனநலத்துடன் உள்ளனர். குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தை இழப்பதில்லை.

சரியான நேரத்தில், சரியான ஆட்களுடன் திருமணங்கள், நல்ல குடும்ப உறவுகள் என சந்தோஷமாக இருக்கிறோம். தேவையான அளவு சம்பாதிக்கிறோம். நன்றாக போகும் வாழ்க்கையை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறார். அவர் சொன்னதை அவர் மகள் முழுமையாக ஏற்றுக் கொண்டார். நான் இன்னமும் யோசித்துக் கொண்டு உள்ளேன். யோசித்து உங்கள் தலைமுறையினரின் வாழ்க்கை தரத்தை நிர்ணயம் செய்ய நீங்கள்தான் பொறுப்பானவர்கள்.

Tags:    

Similar News