திண்டுக்கல் பூட்டு உலகப்புகழ் வாங்கியது எப்படி? ஒரே ஒரு ஆள்தான் காரணம்..! யாருப்பா அது..?

திருநெல்வேலி அல்வா, விருதுநகர் பால்கோவா என்பதுபோல திண்டுக்கல் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பூட்டு.

Update: 2024-10-28 08:02 GMT

திண்டுக்கல் பூட்டு -கோப்பு படம் 

இன்னிக்கி எத்தனை பெரிய தொழில்நுட்பத்துடன் பூட்டுகள் வந்தாலும் இன்றைக்கும் திண்டுக்கல் பூட்டுகளுக்கு இணையாக வேறு பூட்டுகளை நாம் ஒப்பிட்டுவிடமுடியாது. அதன் உறுதி, அதன் எடை, யாரும் திறக்கமுடியாத பாதுகாப்பு அம்சம் என உலக அளவில் பேசப்படுகிறது. அது சரி இந்த வியாபாரம் எப்படி தொடங்கியது தெரியுமா..? அந்த சுவாரஸ்யமான கதையைப் பார்ப்போமா..?

வரலாறு அறிவோம் வாருங்கள் 

பரட்டை ஆசாரி, பரட்டை ஆசாரின்னு ஒருத்தர் 1930ம் ஆண்டு காலத்தில திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை அவரது புத்திக்கு தெரிந்தபடி தயார் செய்தார். அந்த பூட்டு ஒரு மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடன் இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைகளுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான பூட்டு.

இப்படி இரண்டு வகையான பூட்டுகளைத் தயார் செய்த பரட்டை ஆசாரி. அதனை ஒரு கடையில் கொடுத்து விற்பனை செய்யச் சொன்னார். கொஞ்ச நாட்கள் கழித்து பல கடைக்காரர்கள் ஆசாரியைத் தேடி ஓடி வந்தனர். என்னடா இது ஏதோ தப்பு நடந்துவிட்டதோ என்று ஆசாரிக்கு ஒன்றும் புரியவில்லை.

திண்டுக்கல்லில் பூட்டுத் தொழில் புகழ் அடைவதற்கு காரணமான பரட்டை ஆசாரி இவருதாங்க.

வந்த கடைக்காரர்களிடம் என்ன விஷயம் என்று விசாரித்தார். வந்திருந்த அனைவரும் ஆசாரியைப் பாராட்டினார்கள். நீங்க ஏற்கனவே செய்த பூட்டுகள் போல் இன்னும் அதிக அளவில் பூட்டுகளைத் தயார் செஞ்சு தரணும் என்று கேட்டுக் கொண்டனர்.

ஓ..அப்படீங்களா..? ஆசாரியும் மகிழ்ந்து அதிக அளவில் பூட்டுகளைச் செய்ய தயாரானார். அவருக்கு உதவியாக இன்னும் ஆட்களை அதிகம் சேர்த்துக் கொண்டார். அன்றில் இருந்து பூட்டு வியாபாரம் சூடுபிடித்து கொடிகட்டி பறக்கத் தொடங்கியது.

பரட்டை ஆசாரியும் அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மிகுந்த ஈடுபாட்டுடன் வழக்கமான பூட்டுகளாக இல்லாமல் அழகிய கற்பனைத் திறனோடும், நீண்ட நாட்கள் உழைக்கும் வலிமையோடும் எளிதில் உடைத்துத் திறக்க முடியாத அமைப்போடும் சிரத்தையாக பூட்டுகளைத் தயாரித்தார். பரட்டை ஆசாரியின் பூட்டுகளுக்கு எந்த பூட்டுகளும் நிகரில்லை என எல்லோரும் பாராட்டினார்கள். அதனால் நிறைய ஆர்டர்கள் தேடி வந்தன.

நாளுக்குநாள் பூட்டின் வியாபாரம் அதிகமாக அதிகமாக பரட்டை ஆசாரியிடம் தொழிலைக் கற்றுக்கொண்ட சிஷ்யர்கள் அவரிடமிருந்து பிரிந்து, தனித்தனியாக பூட்டுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டனர். பூட்டுக்குத் தேவையான இரும்பு திண்டுக்கல்லில் தாராளமாக கிடைத்ததால் திண்டுக்கல் பூட்டு மிக மிக வளர்ச்சியடைந்து பிரபலமானது.

இரட்டைச் சாவி பூட்டு 

இப்படியாக வளர்ச்சியடைந்த பூட்டுத் தொழில். 1945ம் ஆண்டு காலத்தில் திண்டுக்கல்லில் மட்டுமல்லாது வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் இன்னும் ஏன் வெளிநாடுகளிலும் கூட பரவலான வரவேற்பைப் பெற்றது.

திண்டுக்கல் என்றால் உயர்ந்த ரகப் பூட்டுகள் என்று புகழுக்கு உரிய இடமாகியது. இதனை ஒழுங்கு படுத்துவதற்காக 1957ம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது. 1972ம் ஆண்டில் பூட்டு விற்பனை உச்சத்தில் இருந்த சமயம், திண்டுக்கல்லில் இருநூறுக்கும் மேற்பட்ட பூட்டு தொழிற்சாலைகள் உருவாகியிருந்தன. அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பூட்டு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

எப்படி செய்யறாங்க ?

ஒரு இரும்பு தகட்டின்மேல் அடையாளம் செய்து முதலில் துளை இடுகின்றார்கள். அதன்பின்னர் பேஸ் ராட், லீவர் போன்றவைகளைத் தனித்தனியாக தயாரித்து, ஆர்க் வெல்டிங் மூலம் பேஸ்ராட், லீவர் இரண்டையும் இரும்பு தகட்டின் மீது இணைக்கின்றனர். பூட்டு தயார். தயாரான பூட்டுக்கு நிக்கல் பாலிஷ் போட்டு பூட்டை பளபளப்பாக்குகின்றனர். புது பூட்டு ரெடி.இதில் சிறப்பு அம்சம் என்னவெனில் இந்த பூட்டுகள் எல்லாம் கையால் மட்டுமே செய்யப்படும் பூட்டுகள்.


டிகோ பூட்டு:

திண்டுக்கல் கூட்டுறவு சங்கம் தயாரிக்கின்ற இந்தப் பூட்டு உலகப் புகழ் பெற்றது என்றே சொல்லலாம். இந்தப் பூட்டுக்கு ஒரே ஒரு சாவி மட்டுமே உருவாக்கப்படும். அது தொலைந்துவிட்டால் பூட்டை உடைப்பது ஒன்றுதான் ஒரே வழி. வேறு வழியே கிடையாது. ஏனென்றால் கள்ளச் சாவியோ, வேறு சாவியோ போட்டு இந்த பூட்டைத் திறக்க முடியாது. அவ்வளவு வலிமை; அப்படியான தொழில்நுட்பம்.

பெல் லாக்:

இந்தப் பூட்டு சற்று வித்தியாசமானது. பூட்டும் போதும், திறக்கும் போதும் மணி அடிப்பதால் இதற்கு ‘பெல் லாக்’ என்று பெயர்.


லண்டன் லாக்:

ஆங்கிலேயர் காலத்தில் லண்டனிலிருந்து பழுது பார்ப்பதற்காக ஒரு பூட்டு கொண்டுவரப்பட்டிருந்தது. அந்த பூட்டைப் பார்த்து தயார் செய்யப்பட்டது. அந்த பூட்டினுள் ஷட்டர் போன்ற மெல்லிய காகிதம் இருக்கும். வேறு சாவி போட்டு பூட்டைத் திறக்க முயன்றால் அந்த காகிதம் கிழிந்துவிடும். அப்புறம் பூட்டைத் திறக்கவே முடியாது.

இதனை மாடலாகக் கொண்டு திண்டுக்கல் பூட்டுத் தயாரிப்பவர்களும் இதேபோன்ற பூட்டினைத் தயார் செய்தனர். இந்தப் பூட்டுகளை பெரிய பெரிய நிறுவனங்கள் விரும்பி வாங்கினார்கள். ஒரு நிறுவனத்திற்கு 25 பூட்டுகள் தேவைப்பட்டால் 25 பூட்டுக்கும் தனித்தனி சாவிகள் கொடுக்கப்படும். அத்துடன் மாஸ்டர் கீ ஒன்றும் கொடுப்பார்கள். மாஸ்டர் கீயைக் கொண்டு 25 பூட்டுகளையும் திறக்கவும் பூட்டவும் முடியும்.

பூட்டின் விலை ரூ.100 -முதல் அதிகபட்சமாக கோயில் பூட்டின் விலை ரூ.5000 வரை இருக்கும். கோயில்களுக்காக செய்யப்படுகின்ற ஒரு பூட்டின் எடை மட்டும் 22 கிலோ இருக்குமாம். திண்டுக்கல் பூட்டு இல்லையா..? அவ்வளவு சீக்கிரம் உடைத்துவிடமுடியுமா என்ன?

Tags:    

Similar News