விழுப்புரத்தில் இன்று வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம்

இந்த படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காலையிலிருந்தே விழுப்புரத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன

Update: 2023-03-30 07:30 GMT

 விழுப்புரத்தில் இன்று முழு கடையடைப்பு நடைபெற்று வருவதைத் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ள கடைகள் 

விழுப்புரம் மார்க்கெட் பகுதியில் கஞ்சா போதையில் கத்தியால் குத்தி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து  இன்று வணிகர்கள் விழுப்புரத்தில் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் ஜி ஆர் பி தெருவை சேர்ந்தவர் ஞானசேகர். இவர் எம்ஜி ரோடு பகுதியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.  இவரது மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இரண்டு  பேரும்  நேற்று மாலை கஞ்சா போதையில் விழுப்புரம் மார்க்கெட் பகுதியில் கத்தியை வைத்துக்கொண்டு  அப்பகுதியில் சென்ற  பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனைத் தட்டிக் கேட்ட நபர்களை  தாக்கியும் கத்தியால் தாக்கியும்  அச்சுறுத்தியுள்ளனர்.

விழுப்புரம் எம் ஜி ரோடு மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கி அராஜகத்திலும்  ஈடுபட்டனர்.  இந்நிலையில், எம் ஜி ரோடு ஜோதி விருட்சம் பல்பொருள் அங்காடியில் இரண்டு நபர்களும் சண்டையிட்டு கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இப்ராஹிம் என்பவர் இருவரையும் தடுத்து நிறுத்தி சமரசம் செய்து வைக்க முயன்றுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகியோர் இப்ராஹிமை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமுற்று சரிந்து விழுந்த அவரை  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் .

இதனை தொடர்ந்து ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இருவரையும் காவல்து றையினர் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இந்த படுகொலை சம்பவத்திற்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்கும் வகையில் இன்று காலை முதல் மாலை 4 மணி வரை விழுப்புரம் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத்தொடர்ந்து  விழுப்புரத்தில்  95 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் விழுப்புரம் எம்.ஜி. ரோடு மார்க்கெட் பகுதி, நேருஜி வீதி உள்ளிட்ட பகுதியில் உள்ள சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த கடை அடைப்பு போராட்டம்  மாலை 4 மணி வரை நடைபெறும் என வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிகர்கள் அனைவரும் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த இப்ராஹிம் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும் உள்ளனர். இதனால் விழுப்புரத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News