போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, கருப்பு கண்ணாடி
கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, கருப்பு கண்ணாடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா வழங்கினார்;
போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, கருப்பு கண்ணாடி வழங்கும் எஸ்பி ஸ்ரீநாதா
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் விரைவில் அதிகரிக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கொளுத்தும் வெயிலில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர், எலுமிச்சை சாறு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வெயிலில் தொடர்ந்து பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குறைந்த எடை கொண்ட காற்றோட்டமான தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடிகள் ஆகியவற்றை வழங்கவும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் போக்குவரத்து காவலர்களில் முதல்கட்டமாக விழுப்புரம் போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, தொப்பி, கருப்பு கண்ணாடி, நீர் மோர், எலுமிச்சை சாறு மற்றும் கொரோனா நோய் தடுப்புக்காக முக கவசம், கையுறை, சானிடைசர் ஆகியவற்றை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், பணியின்போது போக்குவரத்து காவலர்கள் கட்டாயம் இந்த தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடியை அணிந்துகொண்டு வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், மேற்கு காவல் ஆய்வாளர் செல்வராஜ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வசந்த், உள்பட பலர் கலந்து கொண்டனர்.