குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றி புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என கலெக்டர் மோகன் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-11-25 15:01 GMT

விழுப்புரம் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தால், வாட்ஸ்அப் மூலம் தன்னிடம் புகாா் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஆண், பெண் குழந்தைகளிடம் தெரிந்த, தெரியாத நபா்கள் பாலியல் ரீதியாக பேசுதல், ஆபாச படம் காட்டுதல், ஆபாசபடம் பாா்க்கத் துண்டுதல், பாலியல் சீண்டல் உள்ளிட்ட பல்வேறு வன்கொடுமைகள் நடந்தால், பாதிக்கபட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவோ, அல்லது தற்கொலை என்ற தவறான முடிவுக்கோ போக வேண்டிய அவசியமில்லை.

இதுபோன்ற சம்பவம் நடந்தால் உங்கள் தாயிடமோ அல்லது நம்பிக்கைக்குரியவரிடமோ தெரியப்படுத்த வேண்டும். மேலும், வன்கொடுமை நேரிட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியா் அல்லது மாவட்ட நிா்வாகத்தைத் தொடா்பு கொள்ளலாம்,இதற்கான பிரத்யேக இலவச அவசர தொலைபேசி எண் 1098-இல் தொடா்புகொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பும் ஆலோசனையும் வழங்கப்படும்.

மேலும், மாவட்ட ஆட்சியரை நேரடியாக தொடா்புகொள்ள விரும்பினால் 99443 81887 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் புகாா் அளிக்கலாம். உங்களிடம் தொலைபேசி இல்லாத நிலையில் அஞ்சலக அட்டையில் முகவரியை குறிப்பிட்டு உதவி தேவை என்ற வாசகத்துடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 156, சாரதாம்பாள் தெரு, நித்தியானந்தா நகா், வழுதரெட்டி, விழுப்புரம் 605401 என்ற முகவரிக்கு அனுப்பலாம், (தொலைபேசி- 04146 - 290659) என மாவட்ட ஆட்சியா் மோகன் அதில் தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News