மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்

வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி முறையாக பராமரிக்க கலெக்டர் மோகன் அறிவுறுத்தல்

Update: 2021-12-11 14:16 GMT

விழுப்புரம் கலெக்டர் மோகன் 

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில், மழைநீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வுப் பிரசார மின்னணு திரை வாகனத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் மோகன் கொடியசைத்து தொடக்கிவைத்தார். 

பின்னர் அவர் பேசுகையில்,  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரகப் பகுதிகளில் தொடா்ந்து 5 நாள்களுக்கு மழைநீா் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணா்வு காணொலி குறும்படங்கள் பொதுமக்கள் அறியும் வகையில், இந்த மின்னணு திரை வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

மேலும், அந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு மழைநீா் சேகரிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்படும். மழைநீரை சேகரிப்பதால், நிலத்தடி நீா்மட்டம் உயரும். இது, பொதுமக்களின் குடிநீா் தேவைக்கும், விவசயாத்துக்கும் உதவிகரமாக இருக்கும்.

எனவே, ஒவ்வொரு வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் கட்டாயமாக மழைநீா் கட்டமைப்பை ஏற்படுத்தி, முறையாகப் பராமரித்து மழைநீரை சேகரிக்க வேண்டும் என கலெக்டர் மோகன் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆா்.சங்கா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் வி.அன்பழகன், உதவி நிா்வாகப் பொறியாளா் எம்.ஆனந்தன், நில நீா் வல்லுநா் பழனிவேல் ஆகியோா் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News