சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஆட்சியர் வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என ஆட்சியர் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Update: 2022-08-29 13:00 GMT

விழுப்புரம் ஆட்சியர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கும் மிகப்பெரிய கடமை இருக்கிறது.

குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குறிப்பாக களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்  கலவையற்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும்பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எனாமல் மற்றும் செயற்கை சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். 

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் அதாவது கிழக்கு கடற்கரையில் பொம்மியார்பாளையம், கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம் மற்றும் வீடூர் அணை ஆகிய இடங்களில் மட்டும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதி முறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

விநாயகர் சதுர்த்தி விழாவை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News