ஹெல்மெட் போட்டா கையில பூ; போடலைன்னா காதுல பூ

வேலூரில் சாலை பாதுகாப்பு வார விழாவில் ஹெல்மெட் அணியாதவர்கள் காதில் பூ வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-03-16 15:22 GMT

வேலூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

வேலூரில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஜூனியர் ரெட் கிராஸ் வேலூரில் பாரத சாரண சாரணியர் நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய மாணவர் படை மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி சென்றனர். வேலூர் கோட்டை முன்பு பேரணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார் பா.கார்த்திகேயன், மேயர் சுஜாதா, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

பேரணி வேலூர் காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கி அண்ணா சாலை மக்கள் சந்திப்பு பழைய பஸ் நிலையம் ராஜா தியேட்டர் வழியாக வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியை அடைந்தது.

இந்த பேரணியில் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, ஊரிசு மேல்நிலைப்பள்ளி, செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, ஈவேரா நாகம்மையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கெடுத்தனர்.

பேரணியின் இடையே ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என்பதை வலியுறுத்தி ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ரோஜாப்பூ வழங்கி ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அவர்கள் காதில் ரோஜா பூவை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

Tags:    

Similar News