வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தால் வேலூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

Update: 2024-04-27 05:59 GMT

கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், வெப்பத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இனிவரும் காலங்களில் காலை 12 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறியவர்கள், பெரியவர்கள், நோயாளிகள் என யாரும் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையமும், மாவட்ட நிர்வாகமும் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வெயிலின் அளவு சதம் அடுத்து வருகிறது. இதனால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த நாட்களைவிட, இனி 3 - 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். 

பொதுவாகவே, வேலூர் மாவட்டத்தில் கோடைக்காலங்களான ஏப்ரல், மே மாதங்களின் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் துவங்கி விட்டது. எப்போதுமே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நகரங்களில் ஒன்றான வேலூரில், இந்த ஆண்டு நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும், கோடைக்காலத்திற்கு முன்னரே தொடங்கிய வெயிலின் தாக்கம், தற்போது காலை 10 மணியிலிருந்தே வாட்டி வதைக்கிறது. கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பாகவே, சுமார் 108 டிகிரி செல்சியஸை வரை வெப்பத்தின் அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசியநெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் கானல் நீர் பூமியிலிருந்து வெளியேறி, அனல் காற்றாக வீசுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆகையால், பொதுமக்கள் பெரிதளவில் வெளியே வருவதைத் தவிர்த்து வருகின்றனர்.

வேலூரின் முக்கிய பிரதான சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அப்படி வெளியே வரும் நபர்களுக்காக, வெயிலின் சூட்டைத் தணிக்க இளநீர், பதநீர் மற்றும் பழ வகைகள் விற்கும் சிறு சிறு கடைகள் சாலைகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே கடந்த மாதம் வேலூரில் 101.1 டிகிரி வெப்பம் பதிவானது. அது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. தற்போது 107 வரை நீடித்துள்ள வெப்பம் இனி வரும் நாட்களில், மேலும் அதிகரிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையால் மக்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. வருண பகவான் கருணை கிடைக்குமா? என வேலூர் மக்கள் பெரிதும் ஏங்கி காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News