காட்பாடி ரயில்வே மேம்பாலம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை

காட்பாடி ரயில்வே மேம்பால சாலை சீரமைக்கப்பட உள்ளதால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

Update: 2022-03-17 02:02 GMT

காட்பாடி ரயில்வே பாலம் 

காட்பாடி ரயில்வே மேம்பால சாலை சீரமைக்கப்பட உள்ளதால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தேசிய நெடுஞ்சாலை உட்கோட்டத்துக்கு உட்பட்ட மங்களூரு-விழுப்புரம் சாலையில் உள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் உள்ள இணைப்புகள் வலுவிழந்துள்ளதால், அவற்றை சரிசெய்ய ரெயில்வே நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை தீர்மானித்துள்ளது. இதையொட்டி ரயில்வே மேம்பாலம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

காட்பாடி வழியாக சித்தூர் செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 

வேலூர் மாவட்டத்திற்கு வரும் கனரக வாகனங்கள் வி.ஐ.டி. வழியாக இ.பி.கூட்ரோடு, சேர்காடு வழியாகவும், தென்மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக சித்தூர் செல்லும் கனரக வாகனங்கள் போளூர், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சேர்காடு வழியாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக சித்தூர் செல்லும் கனரக வாகனங்கள் பள்ளிகொண்டா, குடியாத்தம் வழியாகவும் சித்தூர் செல்ல வேண்டும்.

சித்தூரில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் வேலூர் மாவட்டத்திற்கு வரும் கனரக வாகனங்கள் மட்டும் சேர்காடு வழியாக இ.பி.கூட்ரோடு, வி.ஐ.டி. வழியாக வேலூருக்குள் செல்ல வேண்டும்.

சித்தூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் சேர்காடு, ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை வழியாகவும், சித்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் கனரக வாகனங்கள் குடியாத்தம், பள்ளிகொண்டா வழியாக செல்லவும் மாற்று வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News