பூச்சாண்டிக்கு திமுக பயப்படாது: துரைமுருகன் பேட்டி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேட்டி.

Update: 2021-04-02 09:06 GMT

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று(ஏப்ரல். 02) தனது வீட்டில் அவசரமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை அவரது கணவர் சபரீசன் ஆகியோர் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன். இதே போல் சென்னை அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மகன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு வேட்பாளரும் பிரச்சாரத்தை முடித்து ஓட்டுச்சாவடியை நோக்கி பயணம் செய்யும் நேரத்தில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

இந்த சோதனை யாவும் அரசியல் நோக்கத்திற்காகவே அரங்கேறி உள்ளது. தேர்தல் நேரத்தில் இச் சோதனைகளை கண்டு ஸ்டாலினோ அவரது கட்சியினரோ தளர்ந்து விடுவார்கள் என்று மத்திய அரசு தவறான கணக்கு போட்டுள்ளது.

இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படுவது அல்ல திமுக, மிசா காலத்தில் தலைவர் கருணாநிதி துணைவியார் ராஜாத்தி வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்தனர். அப்போது தலைவர் வீட்டில் வெளியில் அமர்ந்து கொண்டு உடன்பிறப்புகளுக்கு மாடல் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் நீங்கள் யார் இந்த வீட்டுக்கு கபாலி என்றெல்லாம் அவரிடம் நக்கலாக கேள்விகளை கேட்டனர். அதற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து அவர் உடன்பிறப்புகளுக்கு மடல் எழுதிக்கொண்டிருந்தார். அஞ்சா நெஞ்சம் கொண்டவர் ஸ்டாலின். வாழைக்கன்று அல்ல ஆலமரத்தின் விழுது மகள் வீட்டில் சோதனை நடைபெற்றது என்று தெரிந்தும், அது குறித்த வருத்தம் இருந்தாலும் அடுத்த கணமே தொண்டர்களுக்கான தன்னுடைய பணியினை துவங்கிவிட்டார் தலைவர் ஸ்டாலின்.

இது போன்ற நடவடிக்கை எ.வ. வேலு ஆகியோர் வீட்டிலும் சமீபத்தில் நடைபெற்றது. இவற்றிற்கு நான் கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த போக்கு ஜனநாயகம் அல்ல. இது போன்ற சோதனைகளுக்கு எல்லாம் திமுக என்றோ பயந்து இருந்தால் அதன்(திமுக) பிணத்தின் மீது என்றோ புல் முளைத்து இருக்கும். இப்படி மன உறுதியுடன் தைரியமான சிந்தனையுடன், வளர்ந்து இருக்காது.

தேர்தல் சமயத்தில் ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது கொடுத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவருக்கு வழங்கப்பட வேண்டிய விருது தான் நானே அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தேன். திமுக, அதிமுக தொடர்பானவர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்றதற்கு, எங்களை பயமுறுத்த சோதனை நடத்துகின்றனர். மற்ற கட்சிகள் மீது கண் துடைப்பிற்காக நடத்தி வருகின்றனர் என்றார்.

தமிழகத்தில் மோடி உட்பட பாஜகவினர் முக்கிய பிரமுகர்கள் இந்த முறை முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எப்படியாவது தமிழகத்தில் ஒரே ஒரு இடத்திலாவது வெற்றி பெற்று விட மாட்டோமா என்ற ஆதங்கம் தான், அவர்களுடைய கட்சிக்கு அது சகஜம் தான், அதை நான் குறை கூற மாட்டேன். அவர்கள் கட்சி ஜெயிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்றார்.

Tags:    

Similar News