தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்: வெறிச்சோடிய வாக்குச்சாவடி

வேலூர் அம்முண்டி கிராம ஊராட்சி மக்கள், உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை மக்கள் முற்றிலும் புறக்கணித்தனர்.

Update: 2021-10-06 12:12 GMT

வாக்காளர்கள் வராததால் வெறிச்சோடிய வாக்குச்சாவடி

காட்பாடியை அடுத்த அம்முண்டி ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் பதவிக்கான இடத்தை பெண்களுக்கான எஸ்சி இடமாக அரசு அறிவித்துள்ளது. ஊரில் சொற்பமான எண்ணிக்கையில் வெறும் மூன்றே மூன்று பட்டியலின சமூகத்தினர் இருக்கக்கூடிய நிலையில், இந்த இடத்தை பொது இடமாக அறிவிக்க வேண்டுமென்று அந்த ஊர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கடந்த செப்டம்பர் 12, 15 ஆகிய தேதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் செப்டம்பர் 22ஆம் தேதி கிராமத்திலுள்ள வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி, தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சூழலில், இங்குள்ள தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மேலும் தலைவருக்கான இடத்தை பொதுப் பிரிவிற்கு மாற்றாத வரை தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக அவ்வூர் மக்கள் அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து கூறியது போன்றே இன்று ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான வாக்குகளை முற்றிலும் செலுத்தாமல் தற்போது தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

ஆயிரத்து 33 பெண் வாக்காளர்கள், ஆயிரத்து 12 ஆண் வாக்காளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 45 வாக்குகள் உள்ள இந்த ஊராட்சியில் தேர்தல் புறக்கணிக்கப்பட்டதால் ஊரிலுள்ள 5 வாக்குச்சாவடிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

Similar News