கே.வி.குப்பம் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கியதை கண்டித்து அதிமுக தொண்டர்கள் போராட்டம்.

கே.வி.குப்பம் அ.தி.மு.கவின் கோட்டை என்றும், கூட்டணியில் வெளியூர் நபருக்கு சீட்டு கொடுத்தால் மக்கள் குறைகளை தெரிவிப்பதில் சிக்கல் இருக்கும் என்பதால் அதிமுகவினர் போராட்டம்.

Update: 2021-03-11 06:12 GMT

சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகளில் கே.வி.குப்பம் தனி தொகுதியை அதிமுக கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கியது. இதில் புரட்சி பாரத கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவே லத்தேரி பேருந்து நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது அதிமுக வசம் உள்ள அதிமுக கோட்டையான கே.வி.குப்பம் தொகுதியை அ.தி.மு.கவுக்கே ஒதுக்க வேண்டும், சென்னையை சேர்ந்த கூட்டணி கட்சி நபருக்கு சீட்டு ஒதுக்கினால் தொகுதி மக்கள் பிரச்சனையை கூற சென்னைக்கு அலைய வேண்டி இருக்கும். ஆகவே கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுகவே போட்டியிட்டு, உள்ளூர் நபருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


Tags:    

Similar News