பேரணாம்பட்டு: வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் சண்முக சுந்தரம் ஆய்வு

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2½ கோடி்யில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் சண்முக சுந்தரம் ஆய்வு

Update: 2021-06-12 14:15 GMT

பேரணாம்பட்டு வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் சண்முக சுந்தரம் ஆய்வு செய்தார்


பேரணாம்பட்டு ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊரக சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொத்தப்பல்லி ஊராட்சியில் ரூ.38 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் ஜல்லி மற்றும் தார்சாலையும், கொத்தப்பல்லி கொட்டாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 35 லட்சம் சிறு பாலம் மற்றும் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டுஆய்வு செய்தார். அப்போது சிறு பாலத்தின் நீளம், அகலம் அளவுகளையும், தடுப்பு சுவரின் உயரம், கட்டுமான பொருட்களின் தரம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் சின்னதாமல் செருவு ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்ட்டு வரும் தார் சாலை, பாலூர் ஊராட்சியில் ரூ.34 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணிகளையும் பார்வையிட்டு, தார் கலவை தரமாக உள்ளதா என பரிசோதனை செய்து, சாலையின் இருபுறங்களிலும் மழை காலங்களில் அரிப்பு ஏற்படாதவாறு தரமாக சாலை அமைத்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சாத்கர் ஊராட்சியில் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் செலவில் மரக்கன்றுகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நட்டார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, உதவி கலெக்டர் ஆட்சியர் ஐஸ்வர்யா (பயிற்சி), உதவி செயற்பொறியாளர் மஞ்சுநாதன், ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, கோபி, பேரணாம்பட்டு தாசில்தார் கோபி, ஒன்றிய உதவி பொறியாளர் சிலம்பரசன் உள்பட வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News