அணைக்கட்டு அருகே கல்லுட்டை கிராமத்தில் கால்வாயில் பாலம் அமைக்க கோரிக்கை

அணைக்கட்டு அருகே பல ஆண்டுகளாக ஆற்றுக்கால்வாய் தண்ணீரில் இறங்கி சடலத்தை தூக்கி செல்வதால் கால்வாயில் பாலம் அமைக்க கோரிக்கை

Update: 2021-07-21 15:00 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த கல்லுட்டை கிராமத்தில் 100 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் . இந்த கிராமத்தில் யாராவது இறந்தால் உத்திரகாவேரி ஆற்றின் கால்வாயை கடந்து சேர்ப்பாடி ஆற்றங்கரையோரமுள்ள மயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனர் .

கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக உத்தர காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கால்வாய் அதிகளவு தண்ணீர் செல்கிறது . இதனால் அங்கு வசிக்கும் மக்கள் ஆற்றுக் கால்வாயை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . கால்வாயில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை அருகே தேங்கியுள்ள அதிகளவு தண்ணீரில் இறங்கி ஆபத்தான நிலையில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கல்லுட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி பட்டம்மாள் ( 90 ) என்பவர் வயது மூப்பால் இறந்தார் . அவரது சடலத்தை மாலை மயானத்திற்கு தூக்கிச்சென்றனர் . அப்போது , உத்திரகாவேரி ஆற்றுக் கால்வாயில் தேங்கியுள்ள மார்பளவு தண்ணீரில் இறங்கி சேறும், சகதியில் சிக்கி இறங்கி ஆபத்தான நிலையில் சடலத்தை தூக்கிச்சென்று அடக்கம் செய்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மழைக்காலங்களில் ஆற்றுக்கால்வாயில் தண்ணீர் செல்லும்போது, ஊரில் இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்வதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். ஆபத்தான நிலையில் கால்வாயை கடந்து செல்லவேண்டியுள்ளது . பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் விதமாக கால்வாயில் மேம்பாலம் அமைக்கவேண்டும்  என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News