போலீசுக்கு பயந்ததால் ஏற்பட்ட விபத்து- தாய், மகன் பலி

Update: 2021-03-15 05:15 GMT

வேலூர் அருகே போலீசுக்கு பயந்து மோட்டார்பைக்கில் வேகமாக சென்று மரத்தில் மோதிய விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(30). இவர் வேலூர் அடுக்கப்பாறை அரசு மருத்துவமனை எதிரில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அடுக்கம்பாறையில் இருந்து மோட்டார்பைக்கில் தனது தாயுடன் வீட்டுக்கு செல்லும் போது அரியூர்-பள்ளிகொண்டா சாலையில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது போலீசில் சிக்காமல் இருக்க சதிஷ் வண்டியை வேகமாக ஓட்டியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்பைக் சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மல்லிகா(50) மற்றும் அவரது மகன் சதீஷ்(30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரியூர் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News