திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது

Update: 2024-04-20 16:19 GMT

சிறப்புப் பேருந்துகள் - கோப்புப்படம் 

சிதிரா பௌர்ணமியை முன்னிட்டு, ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு கூடுதலான பயணிகள் பேருந்தில் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏப்ரல் 22ஆம் தேதி அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23ஆம் தேதி அன்று 628 பேருந்துகளும், மேலும், சென்னை மாதவரத்தில் இருந்து ஏப்ரல் 22ஆம் தேதி அன்று 30 பேருந்துகளும், 23ஆம் தேதி அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

இதுமட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22ஆம் தேதி அன்று 910 பேருந்துகளும், 23ஆம் தேதி அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகளைத் தவிர்த்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பேருந்து இயக்கத்தினைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News