போளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த இரு குழந்தைகள் உயிரிழப்பு

போளூர் அருகே தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.

Update: 2023-10-29 02:46 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரிய கரம் ஊராட்சி காந்தி நகர் பனந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்.

கலசப்பாக்கம் வட்டம் காம்பட்டு கிராமத்தில் வசிக்கும் இவரது தங்கை காவியா தனது ஒன்றரை வயது பெண் குழந்தை பவ்யா ஸ்ரீ உடன் சில நாட்கள் முன்பு தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் காவியா நேற்று காலை வீட்டின் எதிரே உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்று உள்ளார். அப்போது வீட்டில் பவ்யா ஸ்ரீயும் , தமிழ்ச்செல்வனின் மகள் சிந்து பாரதியும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து காவியா வீடு திரும்பிய போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை காணவில்லை உறவினர்களின் துணையுடன் அந்தப் பகுதியில் அனைவரும் தேடினர்.

அப்போது சேகர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள தரைமட்ட கிணற்றில் இரு குழந்தைகளும் தவறி விழுந்தது தெரியவந்தது தண்ணீரில் மிதந்த இருவரையும் மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இரு குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போளூர் துணை வட்டாட்சியர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அப்பகுதி மக்கள் கூறுகையில்,  காவியா இயற்கை உபாதைக்காக வயல்வெளிக்கு சென்றதாகவும், அவரது பின்னால் அவரது மகள் மற்றும் அண்ணன் மகள் இருவரும் வந்துள்ளனர் எனவும், அப்பொழுது இரண்டு பெண் குழந்தைகளும் விவசாய கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

கழிவறை வசதி இல்லாததால் இயற்கை உபாதையை கழிப்பதற்கு, சென்ற இளம்பெண்ணை பின்தொடர்ந்த இரு பெண் குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News