ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 3 பள்ளி வாகனங்கள் பறிமுதல்
போளூர் பகுதியில் ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 3 பள்ளி வாகனங்கள் பறிமுதல்;
ஆரணி வட்டார போக்குவரத்து அதிகாரி சரவணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் மற்றும் ஊழியர்கள் போளூர் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போளூர் பைபாஸ் சாலையில் வந்த தனியார் பள்ளிகளின் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் பள்ளி வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமலும், புதுப்பித்தல் சான்று பெறாமலும் இயங்கியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இரண்டு பள்ளி வாகனங்களை பறிமுதல் செய்தனர். சமீபத்தில் ரெண்டேரிப்பட்டு அருகில் வசூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த வேன் மோசமான நிலையில் இயக்கப்பட்டதும், புதுப்பித்தல் சான்று பெறாமல் இயங்கியதையும் அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து அந்த பள்ளி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 3 வாகனங்களை போளூர் போலீசில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து அதிகாரிகள் போளூர் பஸ் நிலையம் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய ஆட்டோவுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.