எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் விஷம் குடித்து உயிரிழப்பு

எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் விஷம் குடித்து இறந்ததையடுத்து அவரது சாவில் மர்மம் உள்ளதாக தந்தை புகார் அளித்துள்ளார்

Update: 2021-12-07 05:43 GMT

சேத்துப்பட்டு தாலுகா குடுமித்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணி மகன் தட்சிணா (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் சீட்டு பணம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்து உள்ளது. வீட்டில் தட்சிணா இல்லாத போது எதிர்தரப்பினர் அத்துமீறி நுழைந்து அவரது ஆட்டோ மற்றும் நகைகளை எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், அவர் கடந்த 1-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்து உள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து தட்சிணாவை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது எஸ்பி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர் விஷம் குடித்த நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக அவர்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. மருத்துவமனையில் தட்சிணாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே  தட்சிணாவின் தந்தை மணி மற்றும் உறவினர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தட்சிணாவின் இறப்பில் மர்மம் உள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்தி நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் முருகேஷ் உரிய விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளார்

Tags:    

Similar News