தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோவிலில் தீ விபத்து

மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஐம்பொன் சிலைகள் தப்பியது.

Update: 2024-08-24 03:13 GMT

தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோவில்

சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று இரவு ஏற்பட்ட மின் கசிவில் தீ விபத்து ஏற்பட்டு கருவறையில் இருந்த பொருட்கள் எரிந்தும், சாமி சிலைகள் மட்டும் உருகாமல் தப்பியது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த பெரியநாயகியம்மன் உள்ளது. இக்கோயில் சம்புவ ராயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

தற்போ து மீண்டு ம் இக்கோயில் புதுப்பிக்க தமிழக அரசு ரூ.1.78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோயில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கருவறை முன்புள்ள மண்டபத்தில் திருவிழா காலங்களில் பயன்படுத்தும் 13 உற்சவர் சிலைகள், பக்தர்கள் வழங்கும் காணிக்கை பொருட்களான சேலை, நெய், தீப எண்ணெய், மஞ்சள், குங்குமம் , விபூதி, யாகசாலைக்கு பயன்படுத்தப்படும் கலசங்கள், யாகசாலை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் இரவு 9 மணிக்கு கோவில் குருக்கள் குரு பிரசாத் கோயில் நடை சாத்திக்கொண்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை 6.30 மணிக்கு வந்து கோவில் நடை திறந்து உள்ளேசென்று பார்த்தபோது போது மின் கசிவு காரணமாக கருவறை மண்டபத்தின் கதவுகள் தீயில் கருகி புகைமூட்டமாக காணப்பட்டது.

இதைக் கண்டு கோயில் குருக்கள் அதிர்ச்சி அடைந்தார். உடனே பஞ். தலைவர் வெங்கடேசன், விழா குழு தலைவர் மீனாட்சிசுந்தரம், விழா குழுவினருக்கு கோயில் குருக்கள் தகவல் தெரிவித்தார். பின்னர் சேத்துப்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். பின்னர் மண்டபத்தில் வைத்திருந்த உற்சவர் சிலைகள், கலசங்கள் ஆகியவற்றை வெளியே கொண்டு வந்து பார்த்தபோது சுவாமி சிலைகள் புகை மூட்டத்தில் கருப்பு நிறத்தில் காணப்பட்டது. ஆனால் சிலைகளுக்கு சேதாரம் எதுவும் இல்லை. தீ விபத்தில் ஐம்பொன் சிலைகள் உருகாமல் தப்பியது. இது குறித்து இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவாஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி நேரில் வந்து தீ விபத்து ஏற்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலை பார்வையிட்டார். அப்போது உற்சவர் சிலைகள் சேதம் அடைந்துள்ளதா, என தகுந்த நிபுணர்கள் மூலம் கண்டறியப்பட்டு, நாளை கருகிய சிலைகளை ஆகம விதிப்படி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இச்சம்பவத்தால் தேவிகாபுரம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News