ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்

Update: 2022-03-11 14:19 GMT

விவசாயிகள் தரையில் சாஷ்ட்டாங்கமாக படுத்து நூதனமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியாண்டவர் என்பவர் கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி 28 மூட்டை பொன்னி நெல்லை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்தார்.

பொன்னி நெல் அதிக விலை போகாததால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. அவர், மீண்டும் மார்க்கெட் கமிட்டிக்கு தனது பொன்னி நெல்லை விற்பனை செய்ய வந்தார்.

அப்போதும் அதிக விலைக்கு அவரின் நெல் மூட்டைகள் விற்பனையாகவில்லை. இதனால் அவர் அங்கேயே 28 மூட்டை நெல்லை அடுக்கி வைத்திருந்தார்.

அவர், லாட் மேஸ்திரியிடம் சென்று நான் நெல் மூட்டைகளை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறேன், எனக் கூறி தான் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளை எடுக்க முயன்றபோது, அதில் 5 மூட்டை நெல்லை காணவில்லை. எண்ணிக்கை குறைந்திருந்தது குறித்து மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் சேத்துப்பட்டு பழம்பேட்டையில் உள்ள ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டி முன்பு விவசாய சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்துக்கு வாழ்குடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார். விவசாயிகள் தரையில் சாஷ்ட்டாங்கமாக படுத்து நூதனமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரி, விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Tags:    

Similar News