போளூர் அருகே உடன்பிறந்த தம்பியை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர்

போளூர் அருகே நில தகராறில் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-18 01:22 GMT

கோதண்டராமன்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தேசிங்கு என்பவரின் மகன்கள் ஜெகதீசன் மற்றும் இவரது தம்பி கோதண்டராமன். முன்னாள் ராணுவ வீரரான ஜெகதீசனுக்கும் அவரது தம்பிக்கும்  இடையே அடிக்கடி சண்டை மூண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் செய்ய இருப்பதால், கோதண்டராமன் சொத்தில் தனது பங்கை பிரித்து தருமாறு அண்ணன் ஜெகதீசனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டு கோதண்டராமன் தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார் .

இந்நிலையில், நேற்று பிற்பகல் இருவருக்கும் மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜெகதீசன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கோதண்டராமனை நேருக்கு நேராக மார்பில் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த கோதண்டராமன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.


தகவல் அறிந்த போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் குமார் தலைமையில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த தம்பி கோதண்டராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, முன்னாள் ராணுவ வீரர் ஜெகதீசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News