சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூடி கிடக்கும் வணிக வளாகம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூடி கிடக்கும் வணிக வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-01 13:10 GMT

 சேத்துப்பட்டில் மூடி கிடக்கும் வணிக வளாகம்,

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் நெல்கொள்முதல் செய்வதில் தமிழகத்தில் 2வது இடத்திலும், மாவட்டத்தில் முதல் இடத்திலும் உள்ளது. திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வருவாய் ஈட்டும் வகையில், சென்னை தமிழ்நாடு வேளாண்மை விற்பனை நிலையம் சார்பில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் 2019-2020ம் ஆண்டு நபார்டு வங்கி மூலம் ரூபாய் 40 லட்சம் செலவில் 10 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டது.

இந்த வணிக வளாகத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.அன்று ஒரு நாள் மட்டும் திறந்த கடைகள் இன்று வரை திறக்கப்படவில்லை. அரசு பொது மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினாலும் அதிகாரிகள் ஏனோ தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால் வணிக வளாகம் திறக்கப்பட்டதன் நோக்கம் விவசாயிகளை சென்றடையாத நிலை உள்ளது. மேலும், வருவாய் இழப்பும், எந்தவித பயன்பாடும் இல்லாமல் இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி இந்த வணிக வளாகம் மூடியே கிடப்பதால் கட்டிடங்கள் சேதம் அடையும் நிலை உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள வணிக வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News