வட்டார வளா்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம்

ஊரக வேலைத் திட்டப் பணி வழங்குவதில் குழப்பம் நிலவியதால், துணை வட்டார வளா்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Update: 2024-06-09 02:03 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்குவதில் குழப்பம் நிலவியதால், பணியாளா்கள் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டத்தில் 1, 2 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பணியாளா்களுக்கு மட்டும் பண்ணைக் குட்டை அமைக்கும் பணிகள் வழங்கப்பட்டு வருகிறதாம்.

இந்நிலையில் நேற்று காலை சுமார் 150 பேர் குட்டை அமைக்கும் பணிக்கு சென்றுள்ளனர்.

அப்போது பண்ணை குட்டை அமைக்கும் பணிக்காக ஆத்தூரை ஊராட்சி மன்ற செயலாளர் பிரபாகரன் ஒரு பணியாளர் பட்டியலும், ஊராட்சி மன்ற தலைவர் கோதை சம்பத் ஒரு பணியாளர் பட்டியலும் எடுத்து வந்து பணியாளர்களின் பெயர்களை படித்துள்ளனர்.

பணிதள பொறுப்பாளர்களாக புதிய நபர்களை நியமித்து பெயர்களை தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிருப்தி அடைந்த பழைய பணிதள பொறுப்பாளர்கள் அனுசுயா, பூங்கொடி, சசிகலா, விஜயலட்சுமி ஆகியோர் ஊராட்சி செயலாளர் பிரபாகரனிடம் எங்களை ஏன் நீக்கிவிட்டு புதிதாக ஆட்களை நியமிக்கின்றீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது மக்கள் நலப்ப்பணியாளர் கமலா இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணியை கைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி புதிதாக (என்எம்ஆா்) பணியாளா்களின் விவரப் பட்டியலை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியுள்ளாா். அப்போது, ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களின் பெயா் மாறிமாறி வந்ததால் குழப்பம் நிலவியது. இதனால் பணிக்கு வந்த பணியாளா்களுக்கு வேலை வழங்க முடியவில்லை எனக் கூறி நண்பகல் 12 மணிக்கு திருப்பி அனுப்பி உள்ளனா். ஆனால் பணிக்கு வந்த பணியாளர்கள் யாரும் திரும்பி செல்ல மாட்டோம் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார் ஆத்துரை ஊராட்சிக்கு வருகை தந்தார்.

அப்போது பணியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பணிக்கு வந்த எங்களுக்கு பணி நாளாக கணக்கிட்டு கூலி வழங்க வேண்டும் என முழக்கங்களை உறுப்பினர்.

இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார் அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்வதாக தெரிவித்ததை அடுத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை சூழ்ந்து கொண்டு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News