பேருந்துகளை சாலைகளில் நிறுத்தினால் கடும் நடவடிக்கை : பணிமனை மேலாளர் எச்சரிக்கை..!

சேத்துப்பட்டில் பயணிகளை பேருந்து நிலையங்களில் ஏற்றி இறக்க வேண்டும் என போக்குவரத்து பணிமனை மேலாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-29 02:47 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் மட்டுமே பயனிகளை ஏற்றி இறக்க வேண்டும். சாலையில் பயணிகளை இறக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பணிமனை மேலாளர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள சேத்துப்பட்டு பேரூராட்சியில் ஆரணி சாலையில் காமராஜர் பே ருந்து நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கே பொது மக்களுக்கும் பயணிகளுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள செஞ்சி சாலை, வந்தவாசி சாலை, போளூர் சாலை என மூன்று சாலைகளிலும்அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஹோட்டல்கள் , டீக்கடைகள் போன்றவற்றில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அது மட்டுமல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வெளியூர்பயணிகள் இயற்கை உபாதைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர் . குறிப்பாக அமாவாசை பௌர்ணமி, வார இறுதி நாட்கள், விடுமுறை தினங்களில் திருவண்ணாமலை, மேல்மலையனூர், செல்லும் பயணிகள் எங்கே சென்று பேருந்தில் ஏறுவது என தெரியாமல் திணறி வருகின்றனர்.

போக்குவரத்து நெரிச்சலில் பல்வேறு அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர். போதுமான போலீசார் இல்லாததால் மிகவும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே இது குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதுகுறித்து சேத்துப்பட்டு அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் பிரபாகரன் தங்களுடைய மேல் அதிகாரிகள் உத்தரவின் பேரில் சேத்துப்பட்டு வழியாக செல்லும் அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் காமராஜர் பேருந்து நிலையத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பயணிகள் சிரமமின்றி ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.

மேலும் பயணிகளிடம் பணிவாகவும் கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும், இரவு நேரங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் அவர்களை ஏற்றி இறக்க வேண்டும் என அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எடுத்துரைத்து தவறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,தனியார் பேருந்துகளையும் முறையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News