போளூர் அருகே காவல்துறை வேனும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி

போளூர் அருகே காவல்துறை வேனும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானார்; 11 பேர் படுகாயடைந்தனர்

Update: 2021-09-17 07:50 GMT

விபத்தில் உருக்குலைந்த கார்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த அழகுசேனை ஏரிக்கரை பகுதியில் வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காவல்துறை வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள பள்ளத்தில் இறங்காமல் இருக்க டிரைவர் வேனை வலது பக்கம் திருப்பினார்.

அப்போது செங்கத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த காரும் போலீஸ்வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் போலீஸ் வேன் கவிழ்ந்தது. சாலையோரம் இருந்த விநாயகர் கோவில் மீது கார் மோதி நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கி செங்கத்தை சேர்ந்த சரஸ்வதி (வயது53) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் கார் டிரைவர் செவ்வந்தி, காரில் வந்த ராமு, சுந்தர் மற்றும் வேனில் வந்த 9 போலீசார் காயத்துடன் உயிர் தப்பினர்.

அருகில் இருந்தவர்கள் கார் மற்றும் வேனில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்

Tags:    

Similar News