ஜவ்வாது மலையில் 100% வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜவ்வாதுமலை பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் பணியாளர்களிடம் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-03-31 01:22 GMT

ஜவ்வாதுமலை பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் பணியாளர்களிடம் 100% வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர் 

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் ராட்சச பலூனை பறக்கவிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்ட இந்தியன் வங்கி மற்றும் முன்னோடி வங்கி ஆகிய வங்கிகள் சார்பில் மத்திய பேருந்து நிலையத்தில் வண்ணக் கோலங்கள் வரைந்து அதன் அருகில் ராட்சச பலூனில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் எழுதி அதனை பறக்கவிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஜவ்வாதுமலை

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பழங்குடியின உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ஜவ்வாதுமலை பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் பணியாளர்களிடம் 100 சதவீதம் வாக்களிக்க ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்களவை பொது தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் பட்டறைக்காடு கிராமத்தில் பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அடிப்படை வசதியான கழிவறை வசதி, குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர்களிடம் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும் மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தப்படும் சாமை, தேன், புளி போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் ஜவ்வாதுமலை பழங்குடியினர் உழவர் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து கலெக்டர் பாஸ்கரபாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதனை தொடர்ந்து ஜமுனாமரத்தூர் வட்டம் கோவிலூர் ஊராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சீர் வரிசினை கிராம மக்களுக்கு வழங்கி வாக்காளர் கையேட்டினை, வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். இதில் உதவி தேர்தல் அலுவலர் சாந்தி, தாசில்தார் மனோகரன் அரசு அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News