100ஏக்கர் பரப்பளவில் உணவு பூங்கா: அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்குறுதி
களம்பூரில் விவசாயிகள், அரிசி வியாபாரிகள் பயன் அடையும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் உணவு பூங்கா அமைத்து தருவேன் என போளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்;
போளூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி போளூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இதில் களம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் வீதி வீதியாக சென்று தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.
அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், போளூர் தொகுதிக்குட்பட்ட அரிசிக்கு புகழ்பெற்ற களம்பூர் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் அரிசி அதிபர்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் சுமார் நூறு ஏக்கர் அளவில் உணவு பூங்கா அமைத்து தர ஏற்பாடு செய்வேன். மேலும் களம்பூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்து புதிதாக அமைத்து தரப்படும். மேலும் பயணியர் நிழற்குடை அமைத்து தரப்படும். அப்பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்வேன்.
மேலும் அருகிலுள்ள செண்பகத்தோப்பு அணையிலிருந்து களம்பூர் பகுதியிலுள்ள அலியாபாத் ஏரிக்கு நீர்வரத்து கால்வாயை சீரமைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். களம்பூர் பகுதி விவசாயிகளின் நலன் கருதி நிரந்தரமான நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வரப்படும். களம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவேன். போளூர் தொகுதியில் பொருத்தமட்டில் ஒவ்வொரு தொண்டரும் வைக்கப்படுகின்ற கோரிக்கையை ஏற்று அதற்கேற்றாற்போல் நிச்சயமாக செய்து தருவேன். ஆதலால் நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக அமர வைப்பதற்கான வாக்குகளாகும். எனவே வருகின்ற தேர்தலில் என்னை வெற்றி பெற செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
இந்த பரப்புரை கூட்டத்தில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.