கீழ்பென்னாத்தூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து என்ஜினீயர் பலி

கீழ்பென்னாத்தூர் அருகே வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்த என்ஜினீயர், ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பலியான சோகம்

Update: 2021-10-01 06:21 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வழுதலங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயசேகர், விவசாயி. இவரது மகன் பிரதீஷ் (வயது 26). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். வருகிற 4-ந் தேதி வேலைக்காக வங்காளதேசம் செல்ல இருந்தார். இதனால் தனது சொந்த ஊரான வழுதலங்குணம் கிராமத்திற்கு நேற்று  நள்ளிரவு சென்னையிலிருந்து வந்தார்.

கீழ்பென்னாத்தூரில் இறங்கிய அவர் அங்கிருந்து கொட்டாவூர் வழியாக ஆட்டோவில் சென்றார். அப்போது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்தது. அதன்மீது மோதாமல் இருக்க டிரைவர் ஆட்டோவை திருப்பினார். இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பிரதீஷ் தலையில் பலத்த அடிபட்டு சிகிச்சைக்காக கீழ்பென்னாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  4 நாட்களில் வங்காள தேசம் செல்ல இருந்த நிலையில், பிரதீஷ் விபத்துக்குள்ளாகி இறந்தது வழுதலங்குணம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News