செய்யாறு கூட்டுறவு ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செய்யாறு கூட்டுறவு ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

Update: 2021-09-30 08:01 GMT

செய்யாறு கூட்டுறவு ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு சுமார் 300 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் நிரந்தர தொழிலாளர்களான 200 பேர் 2019-20ம் ஆண்டு ஈட்டிய விடுப்புக்கான தொகையை வழங்க வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதத்தில் ஆலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த 3 நாட்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தால் ஆலையில் கரும்பு அரவை நிறுத்தப்பட்டது.

அதனையடுத்து ஆலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஈட்டு விடுப்பிற்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் வருடாந்திர ஈட்டிய விடுப்பிற்கான தொகையினை வழங்கிய ஆலை நிர்வாகம் தற்போது தவறான உத்தரவினை மேற்கோள் காட்டி மூன்று மாதங்களாக சம்பளத்தில் பிடித்தம் செய்து வருவதாக கூறி ஆலை நிர்வாகத்தினை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர். இரவில் ஆலையிலேயே சமைத்து சாப்பிட்டு இன்றும் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுடன், சர்க்கரை ஆலை நிர்வாக முதுநிலை மேலாளர் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ஆலை நிர்வாகம் கோரிக்கையை ஏற்காவிடில் போராட்டம் தொடரும் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News