செய்யாறு அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் உயிரிழப்பு

செய்யாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.மற்றொரு விபத்தில் இன்னொருவர் உயிரிழந்தார்.

Update: 2022-08-18 11:16 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா வெள்ளை கிராமத்தை சேர்ந்தவர் ஜீவகன். இவரது மகன் ராகுல் (வயது 21) செய்யாறு அருகே உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த முனியன் மகன் அசோக்குமாரும் (22). இந்த கல்லூரியில் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். வடபூண்டிப்பட்டு கூட்ரோடு அருகே சென்ற போது எதிரே வந்த தனியார் நிறுவன பஸ் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவர் ராகுல் பரிதாபமாக இறந்தார். அசோக்குமார் தொடர் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது தொடர்பாக செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வெம்பாக்கம் தாலுகா ஆரணிபாட்டை தெருவை சேர்ந்தவர் பாக்யராஜ் (38). இவர் நமண்டி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்து உள்ளார்.  நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் ராந்தம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். சுமங்கலி கூட்ரோடு அருகே சென்ற போது மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியதில் பாக்யராஜ் கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை, கிராம மக்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி  பாக்யராஜ் இன்று இறந்தார். இது குறித்து அவரது சகோதரர் மோகன் கொடுத்த புகாரின்பேரில் பிரம்மதேசம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News